• Guru Mithreshiva - சகுனம் பார்ப்பது சரியா? | EP - 17
    Nov 19 2024

    `மியாவ்' என மழலைக் குரலெழுப்பும் தன் குட்டியை வாயில் லாகவமாகக் கவ்விக்கொண்டு தாய்ப்பூனை நடந்து செல்லும்போது சிலர் அதன் தாய்மைப்பண்பை ரசிப்பார்கள். இன்னும் சிலரோ, ‘ஐயோ, பூனை குறுக்கே போய்விட்டதே' என்று பதறுவார்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றும் பலரிடம் இருக்கிறது. நல்ல நேரம் பார்த்தே செயலைத் தொடங்குவார்கள். அப்படிச் செய்தால் அது வெற்றியாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.
    என்னிடம் பலர், ‘‘குருஜி, சகுனம் பார்ப்பது சரியா, தவறா? ஒரு செயலைத் தொடங்கும்முன் சகுனம் பார்க்க வேண்டுமா?'' என்று கேட்பார்கள். முதலில் சகுனம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நம் தனிப்பட்ட விருப்பம், மற்றொன்று பிரபஞ்ச சக்தி.

    Más Menos
    12 m
  • Guru Mithreshiva - சாகாத நிலைக்குச் செல்வது எப்படி? | Ep 16
    Aug 12 2024

    இப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மழை, வெள்ளம், புயல், சுனாமி என ஏதோ ஒன்று நிகழ்ந்து ஏராளமான பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகளைப் பார்த்தோம்... பேரிழப்பு.
    ‘‘குருஜி, இந்தப் பேரிடர்கள் எல்லாம் ஏன் நடக்கின்றன? இதை எப்படிப் புரிந்துகொள்வது?’' என்று என்னிடம் அநேகர் கேட்பதுண்டு. நிறைய பேர் இதைக் கடவுள் தரும் தண்டனை என்று நினைக்கிறார்கள்.
    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், ‘இயற்கையில் எதுவுமே தற்செயல் அல்ல' என்பதுதான். இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் தொடர்பு இருக்கிறது. இயற்கை நம்மைச் சார்ந்து இருக்கிறது. நாம் இயற்கையைச் சார்ந்து இருக்கிறோம். அதாவது இயற்கையின் படைப்புகளில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன (Interdependent).

    Más Menos
    16 m
  • Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி? Ep 15
    Aug 12 2024

    `நல்லவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். ஆனால், கெட்டவர்கள் சுகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாக நடக்கிறது. ஏன் இப்படி இருக்கிறது குருஜி?'
    என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. உங்களுக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கலாம். ஒரு ரகசியம் சொல்கிறேன். இயற்கையில் நல்லவன், கெட்டவன் என்ற பேதமே இல்லை. உண்மையானவன், பொய்யானவன் என்றுதான் உள்ளது. ‘நல்லவனாக இரு' என்று வாழும் வழி சொல்கிறார்களே தவிர ‘உண்மையாக இரு’ என்று யாரும் சொல்லவேயில்லை.
    குழந்தைகள் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். நம் வீட்டில் எப்படி விளையாடி சேட்டை செய்து சந்தோஷமாக இருப்பார்களோ, அப்படித்தான் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் இருப்பார்கள். ஆனால் நாம் அதை அனுமதிப்பதில்லை. ‘இப்படியெல்லாம் சேட்டை பண்ணக்கூடாது. இதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்... பேசாமல் இரு' என்று கட்டுப்படுத்துவோம்.

    Más Menos
    21 m
  • Guru Mithreshiva - வெற்றி பெற நம்பிக்கை மட்டுமே போதுமா? - Episode 14
    Aug 12 2024

    வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, நம்பிக்கை பற்றியது. ‘குருஜி, வாழ்வில் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று பலரும் சொல்கிறார்களே... வெற்றிக்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா?' என்று சிலர் கேட்பார்கள். மிகவும் ஆழமான கேள்வி இது.

    எப்போது நீங்கள் குருட்டுத்தனமான நம்பிக்கைக்குள் (Belief) போய்விட்டீர்களோ, அப்போது அறியாமைக்குள் சென்று சிக்கிக் கொள்வீர்கள். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை; அல்லது புரியவில்லை. அதுகுறித்து ஏற்கெனவே ஒரு கருத்து இருக்கிறது. அதை நீங்கள் ஏற்கிறீர்கள். அதன்மூலம் நீங்கள் அடையும் நம்பிக்கை, உங்களைக் கற்றுக்கொள்ளவே விடாது. இது உங்களின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடை.

    Más Menos
    15 m
  • Guru Mithreshiva - எல்லோரும் அதிர்ஷ்டசாலியாக முடியுமா? Episode 13
    Aug 1 2024

    எல்லோருக்கும் அதிர்ஷ்டசாலியாக இருக்கவே விருப்பம். அதிர்ஷ்டமே தம்மை வாழ்வில் உயர்த்தும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் சிலரோ, தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று புலம்புவார்கள். என்னிடம் ஒருவர், ‘‘குருஜி, எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. வாழ்க்கையில் நான் அதிர்ஷ்டசாலியாக மாறுவது எப்படி?’’ என்று கேட்டார்.

    Más Menos
    17 m
  • Guru Mithreshiva - வெற்றி, தோல்வியை எப்படிப் பார்ப்பது? Episode 12
    Aug 1 2024

    சீடன் ஒருவனை அவசர வேலையாக வெளியூர் அனுப்பி வைத்தார் குரு. அப்போது நள்ளிரவு. போக வேண்டியதோ காட்டுவழிப்பாதை. ‘‘இருளில் எப்படிப் போவது?'’ என்று கவலைப்பட்டான் சீடன். உடனே குரு அவன் கையில் ஒரு விளக்கைக் கொடுத்து, ‘‘இது உனக்கு வெளிச்சம் கொடுக்கும்'’ என்றார்.
    ‘சரி' என்று தலையசைத்துப் புறப்பட்ட சீடன் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தான். ‘‘குருவே, இந்த விளக்கின் வெளிச்சம் ஓரடி தூரம்தான் தெரிகிறது. நான் நீண்ட தூரம் இருளில் போகவேண்டும்’’ என்றான். குரு சிரித்தார். ‘‘முதல் ஓரடி நடந்ததும் அடுத்த அடிக்கான வெளிச்சம் உனக்குக் கிடைத்துவிடும். தொடர்ந்து பயணித்தால் போக வேண்டிய இடத்தை அடையலாம். இப்படித்தான் வாழ்க்கையும்’’ என்றார்.

    Más Menos
    15 m
  • Guru Mithreshiva - பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட எளிய வழி? Episode 11
    Aug 1 2024

    ‘உங்களின் அத்தனை கவலைகளையும் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வாருங்கள்' என்று எல்லோரிடமும் சொன்னால், அவர்கள் எடுத்து வரும் மூட்டையில் மிகப்பெரிய சுமையாக ‘பணக்கவலை'தான் இருக்கும். காரணம், பலருக்கும் எப்போதும் பணம் குறித்த கவலை இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவர் இருவருக்கல்ல, உலகத்தில் இருக்கிற பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்னை இது.
    ‘‘குருஜி, பணம் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடவே முடியாதா?'' என்று என்னிடம் பலர் கேட்பதுண்டு. இது சாதாரண கேள்விபோல் தோன்றினாலும் மிகுந்த அர்த்தம் பொருந்திய கேள்வி. இந்த உலகில் வாழ்வதற்குப் பணம் முக்கியம். அதில் சந்தேகமே இல்லை. அதைச் சம்பாதிக்கவே ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஏற்கெனவே இதுகுறித்துப் பேசியிருக்கிறோம். செல்வம் ஏன் அதை வைத்திருப்பவர்களிடமே அதிகம் சென்று சேர்கிறது என்ற பிரபஞ்ச ரகசியத்தை விளக்கியிருக்கிறேன்.

    Más Menos
    10 m
  • Guru Mithreshiva - உங்கள் தனித்தன்மையைக் கண்டறிவது எப்படி? Episode 10
    Aug 1 2024

    ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். தினமும் வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் எடுத்து வருவார். அவற்றில் ஒரு பானையில் சிறு ஓட்டை இருந்தது. எனவே அந்தப் பானையில் எடுத்து வருவதில் பாதித் தண்ணீர், வீடு வருவதற்குள் வழியெங்கும் ஒழுகிவிடும். மற்றொரு பானையில் இருக்கும் நீர் முழுமையாகப் பயன்படும். இதை தினமும் பார்த்து வேதனைப்பட்ட ஓட்டைப் பானை ஒரு நாள் தாழ்வு மனப்பான்மையில், ‘‘ஐயா, என்னால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை’’ என்று விவசாயியிடம் சொல்லி அழுததாம். விவசாயி சிரித்துக்கொண்டே, ‘‘நாம் தினமும் வரும் பாதையை நீ கவனித்தாயா... வழிநெடுக உன்னைச் சுமந்துவந்த பக்கம் மட்டும் செடிகளை நட்டு வைத்தேன். அவற்றில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தாயா? அதேநேரத்தில் எதிர்ப்பக்கத்தில் பூக்கள் இல்லை என்பதையும் கவனித்துப் பார்’’ என்று சொன்னாராம்.
    அப்போதுதான் அந்த ஓட்டைப் பானைக்குப் புரிந்தது. தன்னில் இருந்து சிந்திய நீர் வீணாகவில்லை. செடிகளைச் செழிக்கவைத்துப் பூக்கள் மலர உதவியிருக்கிறது. ‘இயற்கையில் எதுவும் தாழ்வானதல்ல; எல்லாம் பயனுள்ளவைதான்‘ என்னும் ரகசியம் அதற்குப் புரிந்தது.

    இங்கு பலரும் இப்படித்தான் தங்கள் செயல்களின் பயனை உணராமல் இப்படித் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார்கள். இந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், எவரையும் முன்னேறவிடாமல் முடக்கிப்போடும்.


    Más Menos
    14 m
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup